பக்தர்கள் வருகை குறைவு… சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் ரூ.9 கோடி மட்டுமே..
கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்கள் வருகை குறைந்ததால், இந்த ஆண்டில் சபரிமலை சீசனில் முதல் 39 நாட்களில் 9.09 கோடி மட்டுமே வருமானம் கிடைத்துள்ளதாக திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகம் முழுவதும் பிரசித்து பெற்றது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை சீசனில் லட்சக்கணக்கான பக்கதர்கள் கலந்து கொள்வர். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சபரிமலை ஐயப்பன் கோயிலில் குறைந்த அளவிலேயே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
பக்தர்கள் வருகை குறைந்ததால், சபரிமலை ஐயப்பன் கோயிலின் வருவாய் பல மடங்கு வீழ்ச்சி கண்டுள்ளது என்று திருவாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருவாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் தலைவர் என்.வாசு கடந்த வெள்ளிக்கிழமையன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது கூறியதாவது: இந்த ஆண்டில் சபரிமலை சீசனின் முதல் 39 நாட்களில் ரூ.9.09 கோடி மட்டுமே வருவாய் கிடைத்துள்ளது.
இது சென்ற ஆண்டின் இதே காலத்தில் ரூ.156.60 கோடி வருவாய் கிடைத்தது. இந்த ஆண்டில் இதுவரை 71,706 பக்தர்கள் தரிசனம் சபரிமலை ஐயப்பன் செய்துள்ளனர். இது சென்ற ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 5 சதவீதத்துக்கும் குறைவான பக்தர்களே வருகை புரிந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.