தி.மு.க-வுடன் இணைந்து கள்ளத்தனமாக மண் அள்ளும் ஆளுங்கட்சி! – டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

 

தி.மு.க-வுடன் இணைந்து கள்ளத்தனமாக மண் அள்ளும் ஆளுங்கட்சி! – டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு

தி.மு.க-வுடன் கள்ள கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக ஆளுங்கட்சியினர் காவிரியில் மணல் அள்ளி வருவதாக அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக டி.டி.வி.தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில் இந்த ஆண்டாவது கடைமடை பாசனப்பகுதி வரை தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான பணிகளில் அக்கறை காட்டாமல், தி.மு.க.வினரோடு கள்ள கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்புக்கு முன்பே, நீர்நிலைகளைத் தூர்வாரி சீரமைப்பதற்காக தமிழக அரசு ரூ.500 கோடியை ஒதுக்கியிருந்தது. எனினும் பெரும்பாலான இடங்களில் இதற்கான பணிகள் வெளிப்படையாக நடைபெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தன. இதனால் பணிகள் நடைபெறுவதைப் போல காண்பிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்தார்கள். அதன்பிறகும் தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை என்றே தகவல்கள் வருகின்றன.

கடந்த இரண்டாண்டுகளைப் போல இந்தாண்டும் தண்ணீர் வரும் கடைசி நேரத்தில் ஏனோ, தானோவென்று அரைகுறையாகத் தூர்வாரினால் மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டாவின் கடைமடை பாசனப் பகுதிகள் வரை முழுமையாக சென்றடையாது என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நிலைமை இப்படியிருக்க, ஊருக்கு ஊர் ஆளுங்கட்சியினரும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க-வினரும் கள்ள கூட்டணி அமைத்துக்கொண்டு சட்ட விரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆட்சியாளர்கள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டாம்.

தி.மு.க-வுடன் இணைந்து கள்ளத்தனமாக மண் அள்ளும் ஆளுங்கட்சி! – டி.டி.வி.தினகரன் குற்றச்சாட்டு
மேலும் கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் அனைத்து விவசாயிகளுக்கும் சாகுபடிக்கான உரம் உள்ளிட்ட இடுபொருட்களைக் குறைந்தபட்சம் 50 சதவிகித மானியத்தில் வழங்குதற்கும், அவை தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வெண்டும். சாகுபடி பணிகளைச் செய்வதற்குப் பெருமளவு பம்ப்செட் பாசனத்தையும் நம்பியிருப்பதால் தினமும் குறைந்தபட்சம் 12 மணி நேரம் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்புக் கடன் உதவிகளை வங்கிகள் மறுப்பேதும் சொல்லாமல் வழங்குகின்றனவா என்பதையும் அரசு கவனிக்க வேண்டும். விவசாயிகள் மற்றும் விவசாய பணிகள் தொடர்பாக வரும் முறையீடுகளை முன்னுரிமை கொடுத்து கவனித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு அறிவுறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.