ஈரோட்டில் மளிகை வியாபாரியிடம் ரூ.4.5 லட்சம் பறிமுதல்!
ஈரோடு
ஈரோட்டில் மளிகை பொருள் வியாபாரி உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச்சென்ற 4 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப் படுகிறதா? என்பதை கண்காணிக்கும் விதமாக, மாவட்டம் முழுவதும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் தேர்தல் பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர், வீடியோ குழுவினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, நேற்று நள்ளிரவு ஈரோடு சோலார் பிரிவில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் 4 லட்சத்து 55 ஆயிரத்து 700 ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காரை ஓட்டிவந்த தவ்பித் மைதீன் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் மளிகைக் கடையில் வசூலான பணத்தை கொண்டு செல்வதாக தெரிவித்தார்.
ஆனால், பணத்திற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் அதனை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அதனை ஈரோடு மேற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சைபுதீனிடம் ஒப்படைத்தனர். பணத்திற்கான உரிய ஆவணங்களை காண்பித்து, பணத்தை பெற்றுச் செல்லலாம் என தவ்பித் மைதீனிடம், அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.