சத்தியமங்கலத்தில் பேருந்து பயணியிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

 

சத்தியமங்கலத்தில் பேருந்து பயணியிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்தில் பயணி உரிய ஆவணமின்றி எடுத்துச்சென்ற 7 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செண்பகபுதூரில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவையில் இருந்து அந்த வழியாக கர்நாடக மாநிலத்திற்கு சென்ற அரசு பேருந்தை மறித்து, பயணிகளிடம் சோதனை நடத்தினர்.

சத்தியமங்கலத்தில் பேருந்து பயணியிடம் ரூ.7 லட்சம் பறிமுதல்!

அதில் பயணி ஒருவர் 7 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, அந்த நபரிடம் விசாரித்ததில், அவர் கோவை மாவட்டம் அன்னூரை சேர்ந்த வியாபாரி தாமோதரன் என்றும், தானியம் வாங்குவதற்காக கர்நாடகாவிற்கு பணத்தை எடுத்துச் செல்வதாகவும் கூறினார்.

ஆனால் பணத்திற்கான ஆவணங்கள் அவரிடம் இல்லாததால் ரூ.7 லட்சத்து 18 ஆயிரம் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். பின்னர், அந்த பணம் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.