ஆட்டு வியாபாரிகளை தாக்கி ரூ.60 ஆயிரம் பணம், தங்க நகை வழிப்பறி!

 

ஆட்டு வியாபாரிகளை தாக்கி ரூ.60 ஆயிரம் பணம், தங்க நகை வழிப்பறி!

தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே ஆட்டு வியாபாரிகளை தாக்கி 60 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் தங்க நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அடுத்த மேலக்கரந்தை பகுதியை சேர்ந்தவர் முருகன். ஆட்டு வியாபாரி. இவரது நண்பர் தூத்துக்குடி மேலூரை சேர்ந்த மந்திரம். இவர்கள் இருவரும் வியாபாரத்திற்கு ஆடு வாங்குவதற்காக நேற்றிரவு எட்டயபுரம் சென்றுவிட்டு, இருசக்கர வாகனத்தில் மேலக்கரந்தைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

ஆட்டு வியாபாரிகளை தாக்கி ரூ.60 ஆயிரம் பணம், தங்க நகை வழிப்பறி!

இந்த நிலையில், அவர்களை மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த 3 பேர் கும்பல், முருகன் மற்றும் மந்திரம் ஆகியோரை திடீரென வழிமறித்து தாக்கினர். தொடர்ந்து, அவர்கள் வியாபாரத்திற்காக வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் மந்திரம் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க மோதிரம் மற்றும் 2 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செல்போன் ஆகியவற்றை பறித்துச் சென்றனர்.

பாதிக்கப்பட்ட இருவரும், இது குறித்து எட்டயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து, வழிப்பறியில் ஈடுபட்ட மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.