பெண்ணின் வங்கி கணக்கில் நூதன முறையில் ரூ.3.76 லட்சம் திருட்டு… ஓடிசாவை சேர்ந்த நபர் கைது…
கோவை
கோவையில் பெண்ணின் கையெழுத்தை போலியாக போட்டு, அவரது வங்கி கணக்கில் இருந்து 3.76 லட்சம் பணத்தை திருடிய ஒடிசாவை சேர்ந்த நபரை போலீசார் கைதுசெய்தனர்.
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அதே பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கியில் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு அவரது வங்கி கணக்கில் இருந்து திடீரென 3 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பணம் மாயானது. இதுகுறித்து வங்கி அதிகாரிகளிடம் விசாரித்தபோது உரிய விளக்கம் கிடைக்காததால், அவர் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடி வந்தனர்.
சந்தேகத்தின் பேரில் அதே பகுதியில் வசித்து வரும் ஓடிசாவை சேர்ந்த ஹிமான்சு குமார் என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், புகார் அளித்த பெண் கணக்கு வைத்துள்ள வங்கியில், அவரும் கணக்கு வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், அந்த பெண்ணின் உறவினர் என போலி கையெழுத்து போட்டு செக் புக் வாங்கி, அதன் மூலம் 3 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கி கணக்கில் இருந்து திருடியதும் அம்பலமானது. இதனை அடுத்து, அவர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.