டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு ரூ.2 லட்சம் மது பாட்டில்கள் கொள்ளை – 3 பேர் கைது!

 

டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு ரூ.2 லட்சம் மது பாட்டில்கள் கொள்ளை – 3 பேர் கைது!

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு, ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை திருடிய 3 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த அய்யம்பேட்டை பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலையொட்டி, கடந்த 3 நாட்களாக கடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், விடுமுறை முடிந்து கடையை திறக்க மேற்பார்வையாளர் சுதாகர் மற்றும் விற்பனையாளர் சென்றனர்.

அப்போது, மதுக் கடையின் சுவரை துளையிட்டு, மர்மநபர்கள் மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சுதாகர், அய்யம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு ரூ.2 லட்சம் மது பாட்டில்கள் கொள்ளை – 3 பேர் கைது!

இந்த நிலையில், அய்யம்பேட்டை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக சரக்கு வாகனத்தில் வந்த 3 நபர்களை சந்தேகத்தின் பேரில் மறித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் தஞ்சையை சேர்ந்த கோகுல்(21), வீரமணி (35) மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த குமார் என்பதும், டாஸ்மாக்கில் துளையிட்டு மதுபாடடில்களை திருடியது தெரியவந்தது.

இதனை அடுத்து, அவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான 820 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். தொடர்ந்து, அவர்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.