கோவை
கோவை அருகே தேங்காய் வியபாரி உரிய ஆவணமின்றி வாகனத்தில் எடுத்துச்சென்ற 2 லட்சம் ரூபாய் பணத்தை, பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆனைமலை அடுத்த மீனாட்சிபுரம் ரயில்வே கேட் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மறித்து சோதனையிட்டனர்.

சோதனையின்போது, அவர் 2 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வாகன ஓட்டியிடம் விசாரித்தபோது, அவர் பெரியபோது பகுதியை சேர்ந்த வியாபாரி ராமு என்பதும், தேங்காய் விற்பனை செய்த 2 லட்சம் பணத்தை கொண்டு சென்றதும் தெரியவந்தது.
மேலும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்ததால், அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஆனைமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் அந்த பணம் ஒப்படைக்கப்பட்டது.