உத்திரமேரூரில் உரிய ஆவணமில்லாத ரூ.2.2 லட்சம் பறிமுதல்!
காஞ்சிபுரம்
உத்திரமேரூர் அருகே உரிய ஆவணமின்றி காரில் எடுத்துச்சென்ற 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை, தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரமேரூர் அருகேயுள்ள மானாம்பதி கூட்டுரோடு பகுதியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அதிகாரிகள், அந்த வழியாக சென்னை நோக்கி சென்ற காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரில் 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, வாகன ஓட்டியிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர், சென்னை ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த சோலை (35) என்பது தெரியவந்தது.
மேலும், பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாதது தெரியவந்ததால், அதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து பறிமுதல் செய்த பணத்தை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் கரூவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.