பிரபல ரவுடி தலை துண்டிக்கப்பட்டு கொலை : 2கிமீ அப்பால் கிடந்த பாதங்கள் மற்றும் உடல்!
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே உள்ள பாதுகாப்பு கம்பியில் ஒருவரின் தலை மட்டும் தனியாக துண்டிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இதை கண்ட சிலர் பதறிபோய் போலீசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புதுக்கும்மிடிப்பூண்டி தைலம் தோட்டத்தில் கொல்லபட்டவரின் பாதங்கள் மற்றும் உடலை கைப்பற்றினர் . பின்னர் அவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடைய ரவுடி மாதவன் என்பது தெரியவந்தது.
கடந்த 2019-ஆம் ஆண்டு மாதவன் தலை இருந்த அதே இடத்தில் கல்லூரி மாணவர் ஆகாஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். இதில் ஆத்துப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மாதவன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அதே இடத்தில் மாதவன் கொல்லப்பட்டுள்ளது ஆகாஷ் கொலைக்கு பழி வாங்கும் செயலா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.