பாதுகாப்பு கோரி காதல் திருமண ஜோடி, எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்!

 

பாதுகாப்பு கோரி காதல் திருமண ஜோடி, எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்!

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட இளம்ஜோடி, பாதுகாப்பு கோரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சமடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகேயுள்ள தோப்புக்காடு பகுதியை சேர்ந்தவர் கௌசல்யா (21). பி.எஸ்சி பட்டதாரி. இதேபோல், ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை அடுத்த வழுதூரை சேர்ந்தவர் விஜய் (30). பொறியியல் பட்டதாரியான இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த கவுசல்யாவும், விஜயும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக காதலித்து வந்துள்ளனர்.

பாதுகாப்பு கோரி காதல் திருமண ஜோடி, எஸ்.பி. அலுவலகத்தில் தஞ்சம்!

இதனை அறிந்த கௌசல்யாவின் குடும்பத்தினர், அவருக்கு வேறு நபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து வந்தனர். இதனால், வீட்டில் இருந்து வெளியேறிய காதலர்கள் இருவரும், நேற்று ராமநாதபுரம் அடுத்த குயவன்குடி சாதுசுப்பையா கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். மேலும், கௌசல்யா வீட்டாரால், தங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சமடைந்த காதல் ஜோடி பாதுகாப்பு கோரி ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி., கார்த்திக்கிடம் தஞ்சம் அடைந்தனர்.

இதுகுறித்து விசாரணை செய்து உரிய பாதுகாப்பு அளிக்க ராமநாதபுரம் மகளிர் போலீசாருக்கு எஸ்.பி. கார்த்தி அறிவுறுத்தினார். இதனை தொடர்ந்து, இரு குடும்பத்தாரையும் மகளிர் போலீசார் அழைத்து சமரசம் பேசினர். மேலும், அவர்களிடம் எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றுக்கொண்டு காதல் தம்பதியை அனுப்பி வைத்தனர்.