டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு, ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை!

 

டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு, ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை!

நெல்லை

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அடுத்துள்ள பெட்டைகுளம் பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. பொதுமுடக்கம் காரணமாக கடந்த 9ஆம் தேதி இரவு முதல் கடை மூடப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று காலை கடையின் சுவர் துளையிடப்பட்டு கிடந்ததை, பார்த்த அந்த பகுதி மக்கள், கடை ஊழியர்களுக்கு தகவல் அளித்தனர்.

டாஸ்மாக் கடை சுவரை துளையிட்டு, ரூ.2 லட்சம் மதுபாட்டில்கள் கொள்ளை!

அதன் பேரில் கடை மேற்பார்வையாளர் குமார் மற்றும் விற்பனையாளர்கள் கடைக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது, மர்மநபர்கள் கடை சுவரை துளையிட்டு உள்ளே இருந்த 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலை உயர்ந்த மதுபாட்டில்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து, கடை மேற்பார்வையாளர் குமார் அளித்த புகாரின் பேரில், திசையன்விளை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டார்.

மேலும், சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து கொள்ளையர்களின் தடயங்களை சேகரித்தனர். மேலும், இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.