நடுரோட்டில் தாக்குதல்… செல்போன், ஏ.டி.எம். கார்டுகள் அபேஸ்! இன்ஜினீயர்கள் பதறவைத்த திருடர்கள்

 

நடுரோட்டில் தாக்குதல்… செல்போன், ஏ.டி.எம். கார்டுகள் அபேஸ்! இன்ஜினீயர்கள் பதறவைத்த திருடர்கள்

நடுரோட்டில் இன்ஜினீயர்களை தாக்கி செல்போன், ஏ.டி.எம். கார்டுகள் வழிப்பறி செய்த கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

காஞ்சீபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரை அடுத்த புதுப்பேர் இந்திரா நகரை சேர்ந்த சுரேஷ் (35), சென்னை தேனாம்பேட்டை ராஜா நாயக்கன்பாக்கம் பகுதியை சேர்ந்த பார்த்தசாரதி (37) ஆகியோர் சிவில் இன்ஜினீயர்கள். இவர்கள் இருவரும் படப்பையை அடுத்த வரதராஜபுரம் ராயப்பா நகரில் கட்டிட பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் இருவரும் முடிச்சூர் பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பிட சென்றுவிட்டு பைக்கில் திரும்பி ராயப்பா நகர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது இரண்டு பைக்குகளில் வந்த 4 பேர் அவர்களுடைய பைக்கை இடித்துள்ளனர்.

அப்போது, தட்டிக்கேட்ட சுரேஷை தாக்கியதுடன், கத்தியால் வெட்டியுள்ளனர். பார்த்தசாரதிக்கும் வெட்டு விழுந்துள்ளது. இருவரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சககட்டிட தொழிலாளர்கள் பைக்கை தடுத்துள்ளனர். இதில் தொழிலாளி சேட்டு என்பவருக்கு காயம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் 4 பேரும் சுரேஷிடம் இருந்த செல்போன், ஏ.டி.எம். கார்டுகள், பார்த்தசாரதியிடம் இருந்த செல்போனை பறித்துச்சென்று தப்பியது கும்பல்.

இது குறித்து சோமங்கலம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போரூர் மதனந்தபுரத்தை சேர்ந்த ஆகாஷ் (27), சென்னை பெரம்பூரை சேர்ந்த தீனா (25), கூடுவாஞ்சேரியை சேர்ந்த நீலகண்டன் (23), மாங்காடு பகுதியை சேர்ந்த முருகேசன் (23) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் கத்தி ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றினர். இதே போல் எத்தனை பேரிடம் அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டனர் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.