கொரோனா ஊரடங்கால் திரைப்படத்துறைக்கு ரூ. 500 கோடி இழப்பு: ஆர்கே செல்வமணி
சின்னத்திரை படப்பிடிப்புகள் 60 பேரை கொண்டு நடத்தலாம் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதனால் கடந்த மார்ச் மாதம் முதல் முடக்கப்பட்ட படப்பிடிப்புகள் மீண்டும் முழு வீச்சில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஃபெப்சி தொழிலாளர்களுக்கு செங்கல்பட்டு பையனுரில் முதல்கட்டமாக 1000 குடியிருப்பு கட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஃபெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி, “முதற்கட்டமாக ஃபெப்சி தொழிலாளர்களுக்கு 1000 வீடுகள் கட்ட அடிக்கல் நாட்டிய தமிழக முதல்வருக்கு நன்றி. ஊரடங்கால் ஒட்டுமொத்தமாக சினிமா தொழிலாளர் பாதிக்கப்பட்டுள்ளனர். டிவி சீரியல் படப்பிடிப்பு நடத்த சில பிரச்னைகள் உண்டு. மாநகராட்சியில் அனுமதி பெற வேண்டியதால் தாமதம் ஏற்படுகிறது. வெளிமாநில நடிகர்கள் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் மருத்துவச் சான்றிதழ் பெற்றிருந்தால் இங்கு வந்ததும் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள். மருத்துவக் காப்பீடு அவசியம் என வலியுறுத்தியிருக்கிறோம். சினிமா படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கினாலும் அதை நடத்த சில நடைமுறை சிக்கல்கள் உள்ளன. வெளிப்புற படப்பிடிப்பு நடந்தால் அதிகப்படியான கூட்டம் சேர வாய்ப்புள்ளதால் யோசித்து முடிவெடுக்கலாம் என அரசு தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஜூன் 10ம் தேதி முதல் சின்னத்திரை படப்பிடிப்புகள் தொடங்கும். கொரோனா ஊரடங்கால் திரைப்படத்துறைக்கு ரூ. 500 கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளது” எனக்கூறினார்.