கொளுத்தி போட்ட திருமா; கொந்தளிக்கும் ட்விட்டர் – பிரதமர் மோடிக்கு வந்த சோதனை! #Resignmodi
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை அதி தீவிரமாகப் பரவி வருகிறது. குறிப்பாக வட மாநிலங்களிலும் தலைநகர் டெல்லியிலும் பரவலின் வேகம் என்பது கற்பனை செய்ய முடியாத அளவிற்கு இருக்கிறது. நாடு முழுவதுமான தொற்று பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. தினசரி உயிரிழப்புகளும் 2 ஆயிரத்தைத் தாண்டுகிறது.
மேலும் கடந்த இரு வாரங்களில் கொரோனா பாதிப்பு விகிதம் இரு மடங்கு உயர்ந்திருக்கிறது. ஏப்ரல் 6ஆம் தேதி 8 சதவீதமாக இருந்த இந்த விகிதம் தற்போது 16.65 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேபோல உயிரிழப்பு விகிதமும் படிப்படியாக உயர்கிறது. அதிகரிக்கும் நோயாளிகளின் எண்ணிக்கையால் படுக்கை வசதி இல்லாமை, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை என அல்லோலப்பட்டுக் கிடக்கின்றன வட மாநிலங்கள்.
இதனால் பல்வேறு மாநிலங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் என பாஜக ஆளும் மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் படுக்கை வசதி இல்லாததாலும் வீதியிலேயே இறக்கும் பரிதாபகரமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் மாநில அரசுகள் அனைத்தும் மத்திய அரசின் உதவியை நாடின. ஆனால் மத்திய அரசோ இதெல்லாம் மாநிலங்களின் பொறுப்பு தான் என்று கூறி கையை விரித்துவிட்டது.
இதனால் கடுங்கோபமடைந்த நெட்டிசன்கள் ட்விட்டரில் கொந்தளித்துள்ளனர். ட்விட்டரில் #Resignmodi என்ற ஹேஸ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்த ஹேஸ்டேக் இந்திய அளவில் முதலிடம் பிடித்திருக்கிறது. இதனால் சில முக்கிய முடிவுகளை எடுக்க பிரதமர் மோடி தலைமையிலான அரசுக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளது. பூனைக்கு மணி கட்டியது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தான். நேற்று கொரோனா உயிரிழப்புகளுக்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என்று கூறியிருந்தார். தற்போது அது நாடு முழுவதும் பரவியுள்ளது.
இந்த விவகாரத்தைக் கையிலெடுத்துள்ள காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்தாலும் தேவையான ஆலோசனைகளை வழங்குகின்றன. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நேற்று மோடிக்கு ஆலோசனை வழங்கி கடிதம் எழுதினார். ஆனால் அதை காதில் வாங்கி கொள்ளாமல் மன்மோகன் சிங்கை விமர்சித்து சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் மூலம் மோடி பதிலடி கடிதம் எழுத வைத்திருக்கிறார்.