`அன்றைய திமுக அரசுக்குக் கிடைத்த வெற்றி!’- உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற வைகோ

 

`அன்றைய திமுக அரசுக்குக் கிடைத்த வெற்றி!’- உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற வைகோ

அருந்ததியர் சமூகத்திற்கு 3% உள் ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, அன்றைய திமுக அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்று கூறியுள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு பட்டியலின பிரிவில் உள்ள அருந்ததியினர் சமூகத்தினருக்கு 3% உள் இட ஒதுக்கீடு வழங்கி சட்டம் இயற்றியது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நிலுவையில் உள்ளதால், புதிய தமிழகம் கிருஷ்ணசாமி மற்றும் சரவணகுமார் தாக்கல் செய்த மனுக்களை, உச்ச நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என யசோதா என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி அருண்மிஸ்ரா தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது.

நீதிபதி அருண்மிஸ்ரா வழங்கிய தீர்ப்பில், அருந்ததியினருக்கு 3 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு. பட்டியல் இனத்துக்கான 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியினருக்கு 3 சதவிதம் உள்ஒதுக்கீடு செல்லும். பட்டியலின பிரிவினர் இடையே உள் ஒதுக்கீடு வழங்கும் வழக்கு 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்படுகிறது. வழக்கை விரிவாக விசாரிப்பதற்காக 7 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமூக நீதி லட்சியத்தையே உயிர் மூச்சாகக் கொண்ட கலைஞரால் பட்டியல் இன மக்களுக்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்ட 18 சதவிகிதத்தில், அருந்ததியினர் சமூகத்திற்கு 3 சதவிகிதம் உள் ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்தது செல்லும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மகிழ்ச்சிக்கு உரியதாகும், வரவேற்கத்தக்கது ஆகும். அன்றைய திமுக அரசுக்குக் கிடைத்த வெற்றியாகும், அருந்ததியினர் இன மக்களுக்கு வரப்பிரசாதமாகும்” என கூறியுள்ளார்.