இது கட்சிக்கும், ஜனநாயகத்துக்கும் அவமானம்.. டிரம்புடன் தொலைப்பேசியில் பேசுவேன்… ராம்தாஸ் அதவாலே
அமெரிக்க பாராளுமன்றத்தில் டிரம்பின் குடியரசு கட்சி ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை சம்பவம் குறித்து அவருடன் தொலைப்பேசியில் பேசுவேன் என்று நம் நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தார்.
அமெரிக்காவில் அண்மையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் புதிய அதிபராக பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தற்போது அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார். இந்த சூழ்நிலையில் வாஷிங்டனில் டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த ஆதரவாளர்கள் பெரிய பேரணியை நடத்தினர். மேலும் அந்நாட்டின் பாராளுமன்றமான கேப்பிட்டல் கட்டிட வளாகத்துக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்நாட்டு போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் சிலர் உயிர் இழந்தனர். டிரம்பின் ஆதரவாளர்கள் பாராளுமன்ற வளாகத்தில் நடத்திய வன்முறை அந்நாட்டில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
உலக நாடுகளின் பல தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தான் அதவாலேயும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராம்தாஸ் அதுவாலே கூறியதாவது: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது அதிக மரியாதை வைத்து இருந்தேன். ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் கிடைத்த உத்தரவை அவமரியாதை செய்த பிறகு அது (டிரம்ப் மீதான மரியாதை) போய் விட்டது.
டிரம்ப் தோல்வியை ஒப்புக்கொண்டு அடுத்த தேர்தலில் வெற்றி பெற முயற்சி மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் அதற்கு பதிலாக மக்களின் உத்தரவை அவர் மதிக்கவில்லை மற்றும் ஜனநாயகத்தையும் அவமரியாதை செய்தார். அமெரிக்க கேபிட்டலில் நடந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது. இது குடியரசு கட்சிக்கும் மட்டுமல்ல, அமெரிக்காவிற்கும், ஜனநாயகத்திற்கும் அவமானம். அதனால்தான் நாங்கள் எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறோம். டிரம்புடன் தொலைப்பேசியில் பேச முயற்சிப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.