குடியரசு தின விழா- திருப்பத்தூர் ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் குடியரசு தின விழாவையொட்டி, மாவட்ட ஆட்சியர் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
திருப்பத்தூர் மாவட்டம் உதயமாகி 2-வது ஆண்டாக இன்று குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. காவலர் பயிற்சி மைதானத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்துகொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, திறந்த ஜீப்பில் சென்று காவலர்களின் அணி வகுப்பை பார்வையிட்ட ஆட்சியர் சிவன் அருள், சிறப்பாக பணியாற்றிய 15 காவலர்களுக்கு, முதலமைச்சரின் காவலர் நற்பணி பதக்கங்களையும் வழங்கினார்.
அதேபோல், கொரொனா தடுப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட, சமூக ஆர்வலர்கள், முன் களப்பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 76 நபர்களுக்கு நற் சான்றிதழ்களையும் வழங்கிய அவர், 12 அரசு துறைகளின் சார்பாக 120 நபர்களுக்கு, 83 லட்சம் 53 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு மயிலாட்டம், கோலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கிராமிய கலைகளை செய்துகாட்டி அசத்தினர். குடியரசு தினவிழாவில் காவல்துறை, வருவாய் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகளாரிகள் பங்கேற்றனர்.