உடலுறவின்போது பாதியில் ஆணுறையை கழற்றினால் குற்றம் – அமலாகும் புதிய சட்டம்!
உடலுறவு என்பது ஆண், பெண் என இருபாலருக்கும் பொதுவான ஒன்று. அதில் கிடைக்கும் இன்பம் என்பதும் பொதுவானதே. இருவருக்கும் சம்மதம் என்ற வஸ்து இதற்கு நடுவில் இருக்கிறது. சம்மதம் இல்லாத உடலுறவு தான் பாலியல் குற்றமாகிறது. அந்த வகையில் உடலுறவில் சம்மதம் என்பது இருவரிடமிருந்தும் தன்னார்வமாக வெளிப்பட வேண்டும்.
சிலருக்கு ஆணுறை பயன்படுத்தாமல் உடலுறவு மேற்கொள்வது பிடிக்கும்; குறிப்பாக ஆண்களுக்கு. ஆனால் பெரும்பான்மையான பெண்களுக்கு கருத்தரிப்பின் அச்சம் காரணமாக ஆணுறையை விரும்புவார்கள். அந்த வகை பெண்களிடம் முதலில் ஆணுறை பயன்படுத்துவதாக ஒப்புதல் வாங்கிகொண்டு, பாதியில் திருட்டுத்தனமாக அதனைக் கழற்றுவது குற்றம் என்கிறது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமலாகவிருக்கும் புதிய சட்டம்.
இப்படி செய்வதன் மூலம் உடலளவிலும் மனதளவிலும் பெண்களின் உணர்வுகள் காயப்படுத்தப்படுவதாகவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்கள் வழக்கு தொடர்ந்து உரிய இழப்பீடு கோரவும் சட்டம் அங்கீகரிக்கிறது. இச்சட்டம் வருவதற்கு மூலகர்த்தாவாக ஜனநாயகக் கட்சியின் அவை உறுப்பினர் கிறிஸ்டினா கார்சியா செயல்பட்டுள்ளார். இதுதொடர்பாகப் பேசியுள்ள அவர், “2017ஆம் ஆண்டிலிருந்து பெண்களும் சில ஆண்களும் ஆணுறையைக் கழற்றும் திருட்டுத்தனத்தால் பாதிக்கப்படுவதற்கு எதிராகச் செயலாற்றிவருகிறேன்.
இந்த அவமானகரமான செயலைச் செய்பவர்கள் பொறுப்பேற்கும் வரை நான் ஓய மாட்டேன். ஆணுறையை இடையில் எப்படி கழற்றுவது என்பது குறித்து சமூக வலைதளங்களில் ஆலோசனைகள் வழங்குகிறார்கள். அது அருவருக்கத்தக்க ஒன்று. ஒருவரின் அதீத இன்பத்திற்காக மற்றொருவர் ஏன் பாதிக்கப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார். இந்தச் சட்டத்தை அமலாக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் இச்சட்டத்தைக் கொண்டுவந்த முதல் மாகாணமாக கலிபோர்னியா இடம்பிடிக்கும்.