மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி கொலை – உறவினர் கைது!

 

மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி கொலை – உறவினர் கைது!

தென்காசி

தென்காசியில் மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளியை கீழே தள்ளி கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர்.

தென்காசி ஆசாத் நகரை சேர்ந்தவர் முருகன் (51). கூலி தொழிலாளி. தென்காசி பாறையடி 2-வது தெருவை சேர்ந்த குருசாமி மகன் சுப்பிரமணியன் (34). இவர் தென்காசி வாய்க்கால் பாலம் பகுதியில் சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார். முருகன் இவரது மாமா ஆவார். மதுப் பழக்கத்திற்கு அடிமையான முருகன், அடிக்கடி மது அருந்திவிட்டு சென்று சுப்பிரமணியன் கடை முன்பு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

மதுபோதையில் தகராறு செய்த தொழிலாளி கொலை – உறவினர் கைது!

இந்த நிலையில், கடந்த ஒன்றாம் தேதி இரவு வழக்கம்போல் முருகன் மதுபோதையில் சென்று சுப்பிரமணியன் கடை முன்பு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், முருகனை சத்தம் போட்டு கீழே பிடித்து தள்ளியுள்ளார். இதில் முருகன் தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தென்காசி போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியனை கைது செய்தனர்.