துரைமுருகன் உடல்நிலை… மருத்துவமனை வெளியிட்ட தகவல்!
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள், வேட்பாளர்கள் என பலருக்கு பாதிப்பு உறுதியாகிறது. முதற்கட்டமாக கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலருக்கும் கூட பாதிப்பு உறுதியானது. அந்த வகையில், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்.
துரைமுருகன் தன்னை வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், பாதிப்பு அதிகமாக இருப்பதால் மருத்துவர்களின் அறிவுரைப்படி அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், சகோதரர் துரை சிங்காரம் உள்ளிட்டோருக்கு கொரோனா உறுதியானது. அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில், துரைமுருகன் உடல்நிலை சீராக இருப்பதாக ரேலா மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அவரது இதயத்துடிப்பு மற்றும் நாடித்துடிப்பு உள்ளிட்டவற்றை தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் உடல்நிலை கவலைப்படும் அளவுக்கு இல்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளது.