பிடிபட்ட வாகனத்தை தர மறுப்பு… காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து தொழிலாளி பலி!

 

பிடிபட்ட வாகனத்தை தர மறுப்பு… காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து தொழிலாளி பலி!

திருவாரூர்

முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் பறிமுதல் செய்த வாகனத்தை கேட்க சென்ற தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு ஊமைகொல்லை பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ்(55). இவர் அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி வேதவள்ளி, அங்கன்வாடியில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகன் விமல்நாதன் (19). இவர் நேற்று தாயார் பணிபுரியும் அங்கன்வாடிக்கு, வீட்டில் இருந்த உணவு பொருட்கள், சத்துமாவு உள்ளிட்டவற்றை இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று கொடுத்து விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

செம்படவன்காடு ரயில்வே கேட் பகுதியில் வந்தபோது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ஊரடங்கை மீறியதாக கூறி விமலநாதனின் வாகனத்தை பறிமுதல் செய்து, முத்துப்பேட்டை காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். தகவல் அறிந்த வேதவள்ளி மற்றும் தர்மராஜன் ஆகியோர் காவல் நிலையம் சென்று போலீசாரிடம் வாகனத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளனர். ஆனால் போலீசார் வழங்க மறுத்ததாக கூறுப்படுகிறது.

பிடிபட்ட வாகனத்தை தர மறுப்பு… காவல் நிலையத்தில் மயங்கி விழுந்து தொழிலாளி பலி!

அப்போது, காவல் நிலையத்தில் நின்றிருந்த தர்மராஜ் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக தர்மராஜை மீட்டு எதிரே உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தர்மராஜை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார். தகவல் அறிந்த அவரது உறவினர்கள் காவல் நிலையம் முன்பு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட எஸ்.பி. ஓம்பிரகாஷ் மீனா, திருத்துறைப்பூண்டி டி.எஸ்.பி. பழனிசாமி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

தொடர்ந்து, தர்மராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அவரது உடலை திருத்துறைப்பூண்டி குற்றவியல் பொறுப்பு நீதிபதி பல்கலைசெல்வன் பார்வையிட்டார். தொடர்ந்து, உடற்கூறு ஆய்வுக்கு பின் இன்று அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.