திருச்சுழி அருகே வீட்டில் பதுக்கிவைத்த 4 ஐம்பொன் சிலைகள் பறிமுதல் – போலீசார் அதிரடி!
விருதுநகர்
திருச்சுழி அருகே வீட்டில் பதுக்கிவைத்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சுவாமி சிலைகளை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கோயில் பூசாரி உள்பட 4 பேரை கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள அபிராமம் சாலை சந்திப்பு பகுதியில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை போலீசார் நிறுத்த முயன்றனர். இதனை கண்டு வாகனத்தில் இருந்த இருவர் தப்பியோட முயற்சித்த நிலையில், அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது, அவர்கள் ஐம்பொன்னால் ஆன அம்மன் சிலையை வாகனத்தில் கடத்திச்சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, இருவரையும் நரிக்குடி காவல் நிலையம் அழைததுச் சென்று போலீசார் விசாரித்தனர். அதில் அவர்கள் பரமக்குடியை சேர்ந்த பழனிசாமி மற்றும் கூரிப்பாண்டி என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, அவர்கள் அளித்த தகவலின் பேரில் மினாக்குளம் பகுதியை சேர்ந்த கோவில் பூசாரி சின்னையா என்பவரது வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, சின்னையா வீட்டில் ஐம்பொன்னால் ஆன புத்தர், விநாயகர் உள்ளிட்ட 3 சிலைகள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, 3எ சிலைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது.
சிலைக்கடத்தல் தொடர்பாக, பூசாரி சின்னையா, அவரது கூட்டளி பழனிமுருகன், பரமக்குடியை சேர்ந்த பழனிசாமி, கூரிப்பாண்டி ஆகிய 4 பேரையும் கைதுசெய்த போலீசார், அவர்களிடம் சிலைகள் எங்கிருந்து கடத்தப்பட்டது என்றும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.