நீச்சல் கற்றுக் கொள்ள ஆற்றுக்கு சென்ற சகோதரர்கள்; தந்தை கண்முன்னே உயிரிழந்த சோகம்.. கலங்க வைக்கும் சம்பவம்!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் என்னும் பகுதியில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன். இவரது மகன்கள் கணேஷ் (22) மற்றும் சிவராஜ்(18). கணேஷ் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வீட்டில் இருக்கும் நிலையில், சிவராஜ் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது கொரோனாவால் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சிவராஜும் வீட்டுக்கு வந்துள்ளார்.
அவர்கள் இரண்டு பேருக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்க முடிவு செய்த தமிழ்ச்செல்வன், அவர்களது வீட்டுக்கு அருகே இருக்கும் ஆற்றுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தந்தை சொல்லிக் கொடுக்க, மகன்கள் இரண்டு பேரும் நீச்சல் கற்றுக் கொண்டிருந்துள்ளனர். அப்போது அவர்கள் இரண்டு பேரும் திடீரென ஆழம் அதிகமாக இருக்கும் இடத்துக்கு சென்றதால் நீரில் மூழ்க ஆரம்பித்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழ்செல்வன், அருகில் இருந்தவர்களின் உதவியுடன் அவர்களை மீட்க முயன்றுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
தன் கண்முன்னே மகன்கள் உயிரிழந்ததை பார்த்து தந்தை கதறி அழுத காட்சி காண்போரை கலங்க செய்துள்ளது.தகவல் அறிந்து வந்த போலீசார் ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.