கொரோனாவுக்கு பலியான 15 வயது சிறுவன் : தமிழகத்தில் முதன்முறையாக நேர்ந்த இளம்வயது இறப்பு!
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 1843 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 46, 504 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நேற்று இறந்தவர்களின் எண்ணிக்கை 44 ஆகும். இதன்மூலம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 479 ஆக உயர்ந்துள்ளது. இதில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 32 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 12 பேரும் அடங்குவர்.
இந்நிலையில் சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 15 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிறுவனுக்கு ஏற்கனவே அரிய வகை தசை சிதைவு நோய் இருந்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த சிறுவன் மூச்சு திணறல் காரணமாக கடந்த ஜூன் 12-ஆம் தேதி கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து சிறுவனுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு , குளுக்கோஸ் மூலமாகவே உடலுக்கு தேவையான சத்துக்கள் கொடுக்கப்பட்டன. ஆனாலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பலியானான். கொரோனா பாதிப்புக்கு தமிழகத்தில் இளம்வயது மரணம் நிகழ்ந்துள்ளது இதுவே முதன்முறை. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.