‘பெரும்பான்மை இருப்பதால் ஜனநாயகத் தன்மையை அழிப்பதா?’ இலங்கை அரசுக்கு ரணில் விக்ரமசிங்க கேள்வி
இலங்கையில் சமீபத்தில் நடந்த தேர்தலில் ராஜபக்ஷே கட்சியின் தலைமையிலான கூட்ட்ணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ளது. ராஜபக்ஷே மீண்டும் பிரதமர் பதவியேற்றார். அவரின் சகோதரர் கோத்தபய ராஜபக்ஷேதான் அந்த நாட்டின் அதிபர்
தற்போது இலங்கை சட்டத் திருத்தம் 19-யை ரத்து செய்து புதிதாக 20-ம் சட்டத் திருத்தம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. புதிய சட்டம் திருத்தம் அதிபர் கோத்தபய ராஜபக்ஷேவுக்கு பல அதிகாரங்களை வழங்குவதாக உள்ளது.
அதிபர் கோத்தபய முடிவு செய்தால், பாராளுமன்றம் அமைக்கப்பட்டு ஒராண்டு முடிந்ததும் எப்போது வேண்டுமானாலும் கலைக்கலாம். அதற்கான அதிகாரம் அவருக்கு அளிக்கப்படுகிறது.
இன்னும் பல விஷயங்களை உள்ளடக்கிய இந்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்கட்சிகள் எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றன. இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வும் இந்தச் சட்டத்திருத்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
’தேசிய பட்டியல் பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்குள் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினைகளை களைய எல்லோரிடமும் பேச வேண்டும். மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருப்பதால் 19 –ம் சட்டத்திருத்தத்தின் ஜனநாயகத் தன்மையை அழிக்க நினைக்க கூடாது. அதேபோல மரண தண்டனை அளிக்கப்பட்ட குற்றவாளியை பாராளுமன்றத்திற்கு அழைப்பதும் சரியாக இருக்காது’ என்று தெரிவித்துள்ளார்.