இன்றைய தினம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது : ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பேச்சு!
அயோத்தியில் ராமர் கோவில் அடிக்கல்நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 200 பேருக்கு பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் மோடி, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தலைவர் நிர்த்திய கோபால் தாஸ் ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.
இதன் காரணமாக அயோத்தியில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இன்று காலை புறப்பட்டார் . லக்னோ சென்ற பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டரில் அயோத்தி வந்தடைந்தார். அயோத்தி வந்த மோடியை தனிமனித இடைவெளியுடன் முதல்வர் யோகி ஆதித்யநாத் வரவேற்றார்.
காரில் விழா நடைபெறும் இடத்திற்கு வந்த பிரதமர் மோடி முன்னதாக ஹனுமன் கர்கி கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார். அப்போது கொரோனா காலம் என்பதால் கைகளை கழுவிய மோடி வழிப்பாட்டுக்கு பிறகு கோயில் பிரகாரத்தை சுற்றி வந்தார். பின்னர் ராமஜென்ம பூமியில் உள்ள குழந்தை ராமர் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு செய்தார். பின்னர் அங்கு கோயில் வளாகத்தில் மரக்கன்றை நட்டார். தனிமனித இடைவெளியுடன் நடந்த இந்த நிகழ்வுகளின் போது மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனிருந்தார்.
இதையடுத்து அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை விழா தொடங்கியது. இதில் பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்த கொண்டனர். ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்திற்கிடையே வேத மந்திரங்கள் ஓத பூமி பூஜை விழா நடந்தது. பின்னர் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி. 40 கிலோ எடையுள்ள வெள்ளி செங்கல்லை அடிக்கல் நாட்டினார்.
#WATCH live: PM Narendra Modi in Ayodhya for #RamTemple foundation stone laying ceremony. https://t.co/yo5LpodbSz
— ANI (@ANI) August 5, 2020
இந்நிலையில் ராமர் கோயில் பூமி பூஜையில் பிரதமர் மோடி பேசுகையில், “இன்றைய தினம் அயோத்திக்கு விடுதலை கிடைத்துள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்வில் எனக்கு வாய்ப்பளித்தமைக்கு மிக்க நன்றி. உலகம் முழுவதும் ராமர் பக்தி கீதங்கள் ஒலிக்கின்றன. ஸ்ரீ ராமர், சீதாதேவி நினைவு கூறுவோம். வெறுப்புணர்வை மறந்து கோடிக்கணக்கான மக்களை ஒன்று சேர்க்கும் சக்தி ராமருக்கு உள்ளது. ராமரின் வரலாற்றை அழிக்கும் முயற்சி தோல்வி அடைந்துள்ளது. ராமர் கோயில்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு 120 கோடி மக்கள் சார்பில் நன்றி. போராடி சுதந்திரம் பெற்றது போல ஆயிரக்கணக்கானோர் தியாகங்களால் இது நடைபெற்றுள்ளது. ராமர் கோவில் அமைவதற்காக பல தலைமுறைகள் தியாகங்களை செய்துள்ளனர். ராமர் கோயிலில் அயோத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொருளாதாரமும் மேம்படும். கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி நடந்த இந்த விழா மற்றும் விழாக்களுக்கு முன்னுதாரணம்” என்றார்.