ராமர் – லட்சுமணன் போல ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளனர் : அமைச்சர் உதயகுமார்
அனைவரும் கருத்துக்களை தெரிவிக்கவே அவசரக்கூட்டம் நடந்தாக அமைசர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அதிமுக உயர்நிலை கூட்டம் சென்னை அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அப்போது ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பினர். அதில் ஓபிஎஸ் வருகையின் போது அம்மா கைகாட்டி விட்டு சென்ற முதல்வர் என்றும் முதல்வர் பழனிசாமி வருகையின் போது தமிழகத்தின் நிரந்தர முதல்வர் என்றும் முழக்கம் எழுப்பினர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில் முதல்வரின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தரப்படுவதாகவும், அதனால் வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் அதற்கு எடப்பாடி பழனிசாமி கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தெரிகிறது.
இதை தொடர்ந்து அதிமுக செயற்குழு செப்டம்பர் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் மூத்த அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், கடம்பூர் ராஜூ, உடுமலை ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் தீவிர ஆலோசனையில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் சென்னை திருவொற்றியூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதல்வரும் துணை முதல்வரும் ராமர் லஷ்மணர் போல் உள்ளனர். அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது என விளக்கமளித்த அமைச்சர் உதயகுமார், ஆரோக்கிய நிலையை உருவாக்க ஆலோசனை நடந்தது என்றும் அதிமுக அன்பு என்னும் கட்டுப்பாட்டுக்குள், ராணுவ கட்டுப்பாட்டுடன் இருக்கிறது என்றார். தொடர்ந்து பேசிய அவர், முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது என கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது என்றும் கூறியதுடன் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி கூட்டணியை கண்டு திமுக திக்குமுக்காடி உள்ளது என்று தெரிவித்தார்.