கவர்னர் குடும்பத்தின் தலைவர்.. அவருடன் மோதல்களை விரும்பவில்லை…பல்டி அடிக்கும் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் மற்றம் அவரது ஆதரவு எம்.எல்,ஏ.க்கள் 18 பேரும் அதிருப்தியில் உள்ளனர். இதனால் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து முதல்வர் அசோக் கெலாட் சட்டப்பேரவையை கூட்டி தனக்கு பெரும்பான்மை உள்ளதை நிரூபிக்க விரும்பினார். இதற்காக சட்டப்பேரவையை கூட்ட அழைக்குமாறு அம்மாநில கவர்னா் கல்ராஜ் மிஸ்ராவுக்கு அசோக் கெலாட் கோரிக்கை விடுத்தார்.
ஆனால், கவர்னர் உடனடியாக முடிவு எடுக்கவில்லை. இதனையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் ராஜ்பவன் சென்று தர்ணா போராட்டத்தில் அசோக் கெலாட் ஈடுபட்டார். இதன் தொடர்ச்சியாக நிபந்தனைகளுடன் சட்டப்பேரவையை கூட்ட ஒப்புதல் அளிக்கிறேன் என கவர்னர் தெரிவித்தார். மேலும் 3 நிபந்தனைகளுக்கு பதில் அளிக்கும்படி காங்கிரஸ் அரசுக்கு அவர் உத்தரவிட்டார். இதனையடுத்து முதல்வர் அசோக் கெலாட் வீட்டில் அம்மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அந்த கூட்டத்தில் கவர்னரின் 3 நிபந்தனைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்.
அந்த கூட்டம் முடிவடைந்தபிறகு ராஜஸ்தான் போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில், கவர்னருடன் எந்த மோதலையும் நாங்கள் விரும்பவில்லை, அவர்தான் குடும்பத்தின் தலைவர். அமைச்சரவையின் கோரிக்கையை கவர்னர் மறுக்க முடியாது என அரசியலமைப்பு சொல்கிறது. அரசியலமைப்பை மதித்து ஜூலை 31 முதல் அமர்வை தொடங்குவதற்கான முன்மொழிவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா எழுப்பிய அனைத்து கேள்விகளுக்கும் மாநில அரசு பதில் அளித்துள்ளது என தெரிவித்தார்.