மத, அரசியல் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் இருந்தால் ரூ.10,000 அபராதம்… ராஜஸ்தான் அரசு அதிரடி
ராஜஸ்தானில் மத மற்றும் அரசியல் கூட்டங்களில் 100 பேருக்கு மேல் இருந்தால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைககளை அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத மற்றும் அரசியல் கூட்டங்களில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 100ஐ தாண்டினால், வழக்கு பதிவு செய்வதோடு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என ராஜஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
அசோக் கெலாட் தலைமையிலான ராஜஸ்தான் அரசு, ராஜஸ்தான் தொற்று நோய் சட்டம் 2020 கீழ் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: திருமணம் மற்றும் இறுதி சடங்கு தவிர்த்து மாவட்ட கலெக்டர் அனுமதி இல்லாமல் எந்தவிதமான சமூக, மத, அரசியல் அல்லது இதர பொது கூட்டங்கள் நடத்தினால் அதனை ஏற்பாடு செய்தவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும்.
சமூக இடைவெளி கடைப்பிடிக்கவில்லை, நிகழ்ச்சியில் முக கவசம் அணியவில்லை அல்லது முறையாக அணியவில்லை, பரிசோதனை மற்றும் சுகாதார ஏற்பாடுகள் செய்யவில்லை மற்றும் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை 100ஐ கடந்தாலும் அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.