காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்ட புதுமாப்பிளை உயிரிழப்பு… தனியார் மருத்துவமனை முற்றுகை…

 

காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்ட புதுமாப்பிளை உயிரிழப்பு… தனியார் மருத்துவமனை முற்றுகை…

விருதுநகர்

காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்ட புதுமாப்பிள்ளை உயிரிழந்ததால், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த தளவாய்புரம் பகுதியைசேர்ந்தவர் முகேஷ். கூலி தொழிலாளி. இவருக்கு, கடந்த டிசம்பர் மாதம் உறவினரான பூபாலா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முகேஷிற்கு திடீரென தீவிர காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனால் நேற்று காலை தளவாய்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்கு முகேஷை பரிசோதித்த மருத்துவர், அவருக்கு ஊசி செலுத்தி உள்ளார். ஊசி போட்ட சிறிது நேரத்திலேயே ஒவ்வாமை ஏற்பட்டு முகேஷிற்கு உடல் முழுவதும் அரிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவர், அவருக்கு மற்றொரு ஊசியை செலுத்தி உள்ளார். இந்நிலையில் ஊசி செலுத்திய சிறிது நேரத்திலேயே அவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

காய்ச்சலுக்கு ஊசி போட்டுக்கொண்ட புதுமாப்பிளை உயிரிழப்பு… தனியார் மருத்துவமனை முற்றுகை…

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரை மீட்டு உடனடியாக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முகேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்த விட்டதாக கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், முகேஷுக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் போராட்டக்காரர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, மருத்துவரிடம் விசாரித்து வருகின்றனர்.