ஜூன் 1-ஆம் தேதி முதல் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம் – தமிழகத்திற்கு எந்த ரயிலும் இல்லை

 

ஜூன் 1-ஆம் தேதி முதல் 200 பயணிகள் ரயில்கள் இயக்கம் – தமிழகத்திற்கு எந்த ரயிலும் இல்லை

டெல்லி: ஜூன் 1-ஆம் தேதி முதல் 200 பயணிகள் ரயில்கள் இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான ரயில்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாட்டில் நான்கு கட்டங்களாக இதுவரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிறகு பயணிகள் ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக மே 1 முதல் சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்பட்டன.

இந்நிலையில், வருகிற ஜூன் 1-ஆம் தேதி முதல் ஏசி பெட்டிகள் இல்லாத 200 ரயில்கள் தினமும் இயக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். இந்த ரயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்து பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்பதிவுகள் இன்று தொடங்குகிறது. இந்த 200 ரயில்களும் வழக்கமான கால அட்டவணைப்படி இயக்கப்பட உள்ளது. ஜூன் 1-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள 200 பயணிகள் ரயில்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்திற்கான எந்த ரயிலும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.