“நிதி அளித்தவர்களின் பெயர்களை வெளியிட பிரதமர் ஏன் பயப்படுகிறார்?” ராகுல் காந்தி கேள்வி
கொரோனா நோய்த் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் தொடங்கியது. கடும் பாதிப்பை விளைவித்த இந்நோய் தொற்று அடுத்து உலகம் முழுவதும் பாதிக்கத் தொடங்கியது. அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகள் கூட கொரோனா நோய்த் தொற்றைச் சமாளிக்கப் படாதபாடு பட்டு வருகின்றன.
இந்தியாவில் இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா நோய்த் தொற்றல் அதிகரித்தது. அது விரைவாக அதிகரித்து வருவது பெரும் அச்சத்தை விளைவித்து வருகிறது. கொரோனா பாதிப்புகளின் நிதி சுமையைச் சமாளிக்க பாரத பிரதமர் நரேந்திர மோடி பி.எம்.கேர்ஸ் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதில் பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பி.எம். கேர்ஸ் திட்டத்தில் இந்தியாவிலிருந்து மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலிருந்தும் நிதி வந்தன. ஆனால், அதில் நிதி அளித்தவர்களின் விவரங்களை அறிந்துகொள்வதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டது, குறிப்பாக, RTI ல் அதன் விவரங்களைக் கோர முடியாது என்றதும் எதிர்கட்சிகள் தங்களின் கடும் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பி.எம். கேர்ஸ் நிதி தொடர்பாக கேள்வியை எழுப்பியுள்ளார். ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில்,
“பி,எம். கேர்ஸ் திட்டத்துக்கு நிதி அளித்தவர்களின் பெயர்களை வெளிப்படுத்த பிரதமர் ஏன் பயப்படுகிறார்?
சீன நிறுவனங்களான ஹவாய், டிக்டாக், ஒன் ப்ளஸ் போன்றவை பணம் கொடுத்தது எல்லோரும் தெரியும்.
ஏன் அந்த விவரங்களை வெளியிட மறுக்கிறார்?” என்று காட்டமாக தம் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
Why is PM so scared of disclosing the names of those who donated money to him for PMCares?
Everyone knows Chinese companies Huawei, Xiaomi, TikTok and OnePlus gave money.
Why doesn’t he share the details?https://t.co/DLi8SrJ2Jy
— Rahul Gandhi (@RahulGandhi) July 11, 2020
சில நாட்களுக்கு முன், ராகுல் காந்தி பி,எம்.கேர்ஸ் நிதி திட்டத்திலிருந்து கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தும் வென்டிலேட்டர் வாங்கப்பட்டது குறித்து, ‘பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து தரம் குறைந்த வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டன’ என்று குற்றம் சாட்டியிருந்தார்.