திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணித்த புதுக்கோட்டை இளைஞர் மரணம்!

 

திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணித்த புதுக்கோட்டை இளைஞர் மரணம்!

திருச்சி

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்த புதுக்கோட்டையை சேர்ந்த இளைஞர் உடல்நல குறைவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அடுத்த நரியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் வேல்முருகன்(36). இவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு நிஷா ராணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. திருமணமான 2 மாதத்தில் வேல்முருகன், மணப்பாறையை சேர்ந்த ரவி என்பவருக்கு சொந்தமான மலேசியாவில் உள்ள சலூனில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், வேல்முருகனுக்கு சமீபத்தில் அடிக்கடி உடல்நல குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனை அடுத்து, நேற்று அதிகாலை கோலாலம்பூரில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு வந்தார்.

திருச்சிக்கு வந்த விமானத்தில் பயணித்த புதுக்கோட்டை இளைஞர் மரணம்!

விமானம் திருச்சி வந்தடைந்ததும் அனைத்து பயணிகளும் இறங்கிய நிலையில், வேல்முருகன் மட்டும் இருக்கையில் இருந்துள்ளார். இதனால் விமான ஊழியர்கள் சென்று பார்த்தபோது, வேல்முருகன் இருக்கையில் மூச்சு பேச்சு அற்ற நிலையில் அமர்ந்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து விமான ஊழியர்கள் அளித்த தகவலின் பேரில், விமான நிலைய மருத்துவர்கள் விரைந்து சென்று வேல்முருகனை பரிசோதனை செய்து பார்த்தனர். அப்போது, அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.

வேல்முருகன் இறந்த செய்தியை கேட்டு விமான நிலையத்தில் காத்திருந்த அவரது பெற்றோர் மற்றும் மனைவி கதறி அழுதனர். இது காண்போரை கண்கலங்க செய்தது. இதனை அடுத்து, வேல்முருகனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. விமான பயணி மரணம் குறித்து திருச்சி விமான நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.