புதுச்சேரியில் நடிகை மீரா மிதுனின் உருவ பொம்மை எரிப்பு

 

புதுச்சேரியில் நடிகை மீரா மிதுனின் உருவ பொம்மை எரிப்பு

பிக் பாஸ் பிரபலமான மீரா மிதுன் சமீபகாலமாக நடிகர் விஜய், சூர்யா, நடிகை திரிஷா ,ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். குறிப்பாக நடிகர் சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா மற்றும் நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா ஆகியோரைப் பற்றி கடுமையான சொற்களால் விமர்சித்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீரா மிதுனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர். இதனிடையே நடிகை மீரா மிதுன் தூண்டுதலின் பேரில் தனக்கு மிரட்டல் வருவதாக நடிகை ஷாலு சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து புதுச்சேரி கலாம் சேவை மையம் சார்பில் நேற்று கிழக்கு காவல் கண்காணிப்பாளரிடம் நடிகர் சூர்யா ஜோதிகா உள்ளிட்டோரை அவதூறாக நடிகை மீரா மிதுன் பேசியதாக அவர் மீது புகார் மனு கொடுக்கப்பட்டது.

இதற்கு நடிகை மீரா மிதுன் நடிகர் வடிவேல் காமெடியை விட நகைச்சுவையானது என ட்வீட் செய்தார். இதனை கண்டித்து புதுச்சேரி ராஜீவ்காந்தி சிலை அருகே கலாம் சேவை மையத்தை சேர்ந்தவர்கள் நடிகை மீரா மிதுனின் உருவபொம்மை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.