தியேட்டர்களை திறக்க அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி- தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு
திரையரங்கு உரிமையாளர்களிடமிருந்து திரையரங்குகளை திறக்க வரப்பெற்ற கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில் அரசால் வெளியிடப்பட உள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், பார்வையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அவற்றை திரையிட்டும், ஒன்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகள் உள்ள திரையரங்கு வளாகங்கள், வணிக வளாகங்களில் உள்ள திரையரங்குகள் உட்பட அனைத்து திரையரங்குகளும் 50 சதவீதம் இருக்கைகளை மட்டும் பயன்படுத்தி 10.11.2020 முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை துணை தலைவருமான கலைப்புலி எஸ் தாணு, “தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மார்ச் முதல் அக்டோபர் வரை பல மாதங்களாக திரையரங்குகள் மூடிக்கிடந்தது. தற்போது நவம்பர் 10ம் தேதி முதல் 50% இருக்கைகளுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி வழங்கி பல்லாயிரம் சினிமா துறை மற்றும் திரையரங்க ஊழியர்களின் குடும்பத்தில் விளக்கேற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும் , மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜு அவர்களுக்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.