`நித்யானந்தா தேடப்படும் குற்றவாளி!’- கைலாசாவுக்கு அப்ளிகேஷன் போட்ட ஓட்டல் அதிபருக்கு சிக்கல்

 

`நித்யானந்தா தேடப்படும் குற்றவாளி!’- கைலாசாவுக்கு அப்ளிகேஷன் போட்ட ஓட்டல் அதிபருக்கு சிக்கல்

கைலாசா நாட்டில் ஓட்டல் நடத்த தனக்கு அனுமதி வழங்க அனுமதி கோரிய மதுரை ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்படடுள்ளது.

நித்யானந்தா. மறக்க முடியாது பெயர். ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய நித்யானந்தா கைலாசா என்ற நாட்டை உருவாக்கி வருகிறார். கைலாசாவுக்கு என்று தனி ரிசர்வ் பேங்க், கரன்சிகள் என அதிரடி அறிவிப்பை கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்ட அவர், விநாயகர் சதுர்த்தியன்று கைலாசாவிற்கு புதிய தங்க நாணயத்தை அறிமுகப்படுத்தி விட்டார். கால் காசு முதல் 10 காசு வரை 5 வகையான தங்க நாணயங்களை வெளியிட்டுள்ள நித்யானந்தா, இந்த காசுகளை கொண்டு உலகின் 56 இந்து நாடுகளோடு வர்த்தகம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், கைலாசா நாட்டில் உணவகங்களை திறக்க அனுமதி கோரி, மதுரையைச் சேர்ந்த குமார் என்பவர் நித்யானந்தாவுக்கு கடிதம் எழுதினார். கைலாசா எங்கு இருக்கிறது, அவர் அறிவித்த நாணயங்கள் எங்கெங்கு செல்லும் என்கிற பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் விடை தெரியாத நிலையில், மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் பல்வேறு கிளைகளை வைத்துள்ள மதுரை டெம்பிள் சிட்டி ஓட்டலின் உரிமையாளரும், மதுரை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவருமான குமார் என்பவர் நித்யானந்தாவிற்கு ஒரு கோரிக்கை கடிதத்தை அனுப்பினார்.

அதில், கைலாச நாட்டில் தனது ஓட்டலின் கிளையை நிறுவுவதற்கு நித்யானந்தா அனுமதி தரவேண்டும். அவரைப் போன்று தங்களுடைய ஓட்டலும் வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருகிறேன். இந்தக் கோரிக்கையை நேரடியாக நித்யானந்தாவிடம் தெரிவிக்க முடியாத காரணத்தால் நாணய வெளியீடு உள்ளிட்ட அறிவிப்புகளை செய்திகள் மூலமாகத்தான் அறிந்து கொண்டேன். அதே போல தன்னுடைய கோரிக்கையும் செய்தி மூலம் நித்யானந்தா அறிந்து கொள்வார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கைலாசா நாட்டில் ஓட்டல் திறக்க அனுமதி கோரிய நபருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என நித்யானந்தா உறுதியளித்துள்ளார். வீடியோ மூலம் பதிலளித்துள்ள நித்யானந்தா, தனது நிர்வாகிகளிடம் கூறி, கைலாசாவில் ஓட்டல் திறக்க முன்னுரிமை அளிக்கச் செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், கைலாசா நாட்டில் ஓட்டல் நடத்த தனக்கு அனுமதி வழங்க அனுமதி கோரிய மதுரை ஓட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில், “டெம்பிள் சிட்டி ஓட்டல் அதிபர் குமார் இந்திய அரசுக்கு எதிராக செயல்படுவது மட்டுமில்லாமல், அரசால் தேடப்பட்டு வரும் குற்றவாளி நித்யானந்தாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, “காமெடிக்காக நித்யானந்தாவிற்கு கடிதம் எழுதினேன். கைலாசாவில் ஓட்டல் நடத்தும் எண்ணம் எதுவும் தனக்கு இல்லை. என்னுடைய கடிதத்திற்கு நித்தியானந்தாவிடம் பதில் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. கோடிக்கணக்கான இந்தியர்களின் குழப்பத்திற்கு தீர்வு காணும் முயற்சியில் நான் அவ்வாறு கடிதம் எழுதினேன்” என்று அந்தர் பல்டி அடித்துள்ளார் ஓட்டல் அதிபர் குமார்.