நிலத்தகராறில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை… மற்றொருவர் கவலைக்கிடம்…

 

நிலத்தகராறில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை… மற்றொருவர் கவலைக்கிடம்…

தென்காசி

ஆலங்குளம் அருகே நிலத் தகராறில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த சுப்பையாபுரம் பகுதியில் தனியார் சூரிய மின்சக்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு சென்னை கோரட்டூர் பகுதியை சேர்ந்த தியாகராஜன்(51), உதவி மேலாளராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று பிற்பகல் தியாகராஜன் அலுவலகத்தில் இருந்தபோது, அங்கு வந்த மர்ம
கும்பல் அவரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது.

நிலத்தகராறில் தனியார் நிறுவன ஊழியர் வெட்டிக்கொலை… மற்றொருவர் கவலைக்கிடம்…

இதனை தடுக்க முயன்ற ஊழியர் கிருஷ்ணன் என்பவரையும், அந்த கும்பல் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில் பலத்த காயமடைந்த தியாகராஜன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். மேலும் கிருஷ்ணன் படுகாயம் அடைந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ஆலங்குளம் போலீசார், கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தியாகராஜன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், நிலத் தகராறில் கொலை சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது. இது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.