தாலியுடன் சென்ற சாமியார்… நைய புடைத்த அமெரிக்க பெண்… திருவண்ணாமலை வீட்டில் நடந்த அதிர்ச்சி

 

தாலியுடன் சென்ற சாமியார்… நைய புடைத்த அமெரிக்க பெண்… திருவண்ணாமலை வீட்டில் நடந்த அதிர்ச்சி

அமெரிக்க பெண்ணை திருமணம் செய்து கொண்டு அந்த நாட்டில் செட்டிலாக முடிவு செய்த சாமியார், அத்துமீறி வீட்டிற்குள் புகுந்த அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலையில் இருக்கும் அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமானோர் தினந்தோறும் வந்து செல்வர். சாமியார்களும் இங்கு குவிந்து கிடக்கிறார்கள். கொரோனாவால் கிரிவலம் செல்வதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் கிரிவலம் செல்லும் பாதை வெறிச்சோடி கிடக்கிறது. இதனிடையே, அமெரிக்காவை சேர்ந்த 31 வயதுடைய இளம்பெண் ஒருவர் திருவண்ணாமலைக்கு வந்துள்ளார். இவர் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள அருணாச்சலாநகரில் உள்ள வீட்டில் கடந்த 5 மாதங்களாக தங்கி, அங்குள்ள சுற்றுலா இடங்களை பார்த்து வந்துள்ளார். இந்த பெண் இருந்து வரும் பகுதியில் ஏராளமான சாமியார்கள் தங்கியுள்ளனர்.

இதில் ஒரு சாமியார் அந்த பெண்ணை அடிக்கடி சந்தித்து வந்ததோடு, அவரின் நடவடிக்கையை கண்காணித்துள்ளார். வீட்டில் இவரை தவிர யாரும் இல்லாத நேரத்தை அறிந்துவைத்துள்ளார் சாமியார். அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆக நினைத்துள்ளார் சாமியார். சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு தங்கதாலி, அரிவாளை மறைத்துவைத்து சென்றுள்ளார் சாமியார். பெண்ணிடம் பேச்சு கொடுத்த சாமியார், திடீரென பாய்ந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சாமியாரை பலமாக தாக்கியுள்ளார். இதில் நிலை குலைந்த சாமியார் செய்வதறியாது திகைத்துள்ளார். சாமியார் கொண்டு வந்த அரிவாளால் அவரின் தலையில் வெட்டிய பெண், கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு விரைந்து வந்தவர்கள், சாமியாரை நைய புடைத்துள்ளனர். பின்னர் சாமியாரின் கைகளை கட்டிவைத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தலையில் காயத்துடன் இருந்த சாமியாரை காவல்துறையினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்ற முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதையடுத்து, சாமியாரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

அப்போது, காவல்துறையினர் அளித்த வாக்குமூலத்தில், எனது பெயர் மணிகண்டன் (34). நாமக்கல் மாவட்டம் திருமலைபட்டி கிராமம்தான் எனது சொந்த ஊர். தந்தை பெயர் மாதேஸ்வரன். திருவண்ணாமலை வந்த நான், அமெரிக்க பெண்ணை பார்த்தவுடன் காதலில் விழுந்தேன். அவரை மயக்கி திருமணம் செய்து கொண்டு அமெரிக்கா செல்ல முடிவு செய்தேன். சம்பவத்தன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றேன். அவரை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால், அவருக்கு தற்காப்பு கலைகள் தெரிந்துள்ளது. அவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றபோது, என்னை கடுமையாக தாக்கியதோடு, தலையில் அரிவாளால் வெட்டினார். நிலைகுலைந்து நான் கீழே விழுந்துவிட்டேன். அதன் பிறகு என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, சாமியார் மணிகண்டனை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். வெளிநாட்டு பெண்ணை சாமியார் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் திருவண்ணாமலையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.