பிரணாப் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்… ராணுவ மருத்துவமனை அறிவிப்பு!
பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது என்று நேற்று அவரது மகன் கூறியுள்ள நிலையில், பிரணாப் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடந்த 10ம் தேதி மூளையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா இருப்பதும் அன்று உறுதியானது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு பிரணாப் முகர்ஜி கண்விழிக்கவில்லை. அவர் கோமாவுக்கு சென்றுவிட்டார்.
இருப்பினும் வெளிப்புற தூண்டலுக்கு பிரணாப் முகர்ஜி உடல் எதிர்வினையாற்றுகிறது என்று அறிவிக்கப்பட்டது (மூளைச்சாவு என்ற நிலையை அடையவில்லை).
அவரது உடல் உறுப்புகள் இயல்பாக செயல்படுகின்றன. மருத்துவர்கள் கொடுத்த 92 மணி நேர கெடுவை அவர் தாண்டிவிட்டார் என்று கூறப்பட்டது. நேற்று ட்வீட்டில் பதிவு ஒன்றை வெளியிட்ட பிரணாப் முகர்ஜியின் மகன் அபிஜித் முகர்ஜி, தனது தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
Yesterday , I had visited my Father In Hospital . With God’s grace & all your good wishes , He is much better & stable than D preceeding days! All his vital parameters are stable & he is responding to treatment ! We firmly believe that He will be back among us soon
Thank You🙏— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 16, 2020
இந்த நிலையில் டெல்லி ஆர்மி ரிசர்ச் அன்ட் ரெஃபரல் மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது. அவரது முக்கிய உள் உறுப்புகள் மற்றும் மருத்துவ ஆரோக்கிய குறியீடுகள் (ரத்த அழுத்தம், சர்க்கரை போன்றவை) நிலையாக உள்ளன. அவர் தொடர்ந்து வென்டிலேட்டர் துணையுடன் உள்ளார். அவரது உடல்நிலையை மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்று தெரிவித்துள்ளது. உடல்நிலையில் முன்னேற்றம் என்று அவரது மகன் நேற்று கூறியிருந்த நிலையில், மருத்துவ மனையின் அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.