100 சீட் தந்தால் கூட்டணிக்கு வாரேன்.. சித்தப்பாவின் டிமாண்டால் நெருக்கடியில் அகிலேஷ் யாதவ்

 
சிவ்பால் யாதவ்

எதிர்வரும் உத்தர பிரதேச தேர்தலில் என் கட்சிக்கு 100 சீட் தந்தால் கூட்டணிக்கு தயார் என்று தனது சித்தப்பா சிவ்பால் யாதவ் டிமாண்ட் செய்தவால் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நெருக்கடியில் உள்ளார்.

2017ம் ஆண்டில் சமாஜ்வாடி கட்சியில் அகிலேஷ் யாதவுக்கும், அவரது சித்தாப்பா சிவ்பால் யாதவுக்கும் இடையே அதிகார போட்டி ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே மனக்கசப்பு நிலவி வந்தது. இறுதியில் சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் ஆனவுடன் அவர்கள் இருவர்களுக்கு இடையிலான உறவு மோசமடைந்தது. சிவ்பால் யாதவ் சமாஜ்வாடியிலிருந்து விலகி பிரகதிஷீல் சமாஜ்வாடி கட்சி (லோஹியா)  (பி.எஸ்.எல்.பி.) தொடங்கினார்.

சமாஜ்வாடி

தற்போது, 403 உறுப்பினர்களை கொண்ட உத்தர பிரதேச சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டேன், சிறிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார். சொன்னதோடு இல்லாமல் செயலிலும் இறங்கி விட்டார். பல சிறிய கட்சிகளுடன் கூட்டணியை அமைத்து விட்டார். தற்போது தனது சித்தப்பா சிவ்பால் யாதவின் பி.எஸ்.எல்.பி. கட்சியுடன் கூட்டணி குறித்து அகிலேஷ் யாதவ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்.

அகிலேஷ் யாதவ்

இந்நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் எங்களுக்கு 100 சீட் தந்தால் கூட்டணிக்கு தயார் என்று தனது அண்ணன் பையன் அகிலேஷ் யாதவிடம் சிவ்பால் யாதவ் டிமாண்ட் செய்கிறார். பி.எஸ்.எல்.பி.  தலைவர் சிவ்பால் யாதவ் இது தொடர்பாக கூறுகையில், பி.எஸ்.எல்.பி. தலைவர்களுக்கு டிக்கெட் கொடுத்தால் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற முடியும். கூட்டணி ஒப்பந்தம் குறித்து சமாஜ்வாடி ஒரு வாரத்துக்குள் முடிவு எடுக்க தவறினால், அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து லக்னோவில் கட்சி கூட்டம் நடத்தும் என்று தெரிவித்தார். சித்தப்பா சிவ்பால் யாதவ் கட்சியை கூட்டணி சேர்க்கவில்லை என்றால், வாக்குகள் பிரியக்கூடும் என்பதால், என்ன செய்யலாம் என்று  அகிலேஷ் யாதவ் தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தகவல்.