ஒரு கட்சியினர் பேரமா? ஒரே நேரத்தில் விசாரணை
கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 5 பேரிடம் ஒரே நேரத்தில் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது. ஒரு கட்சியினர் பேரம் பேசியதாக அளித்திருந்த வாக்குமூலம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த 2017ஆம் ஆண்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோத்தகிரியில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் கொலை கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இந்த கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், மனோஜ் , வாளையார் மனோஜ், திலீப் சாய், சந்தோஷ், தீபு, ஜம்சிர் அலி உதயகுமார் உள்ளிட்டோர் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் சேலம் மாவட்டத்தில் நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். இதையடுத்து கொடநாடு வழக்கில் நீலகிரி போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து கூடுதல் விசாரணை நடத்தி வருகின்றார்கள் . இதுவரைக்கும் 150-க்கும் மேற்பட்டோரிடம் தனிப்படை போலீசார் கூடுதல் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
இந்த வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கும் சயன், சந்தோஷ் சாமி, ஜம்சிர் அலி, மனோஜ் சாமி, பிஜின் குட்டி, சதீசன் உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை நடத்தி ரகசிய வாக்குமூலம் பெற்று இருக்கிறார்கள். இதேபோல் கொடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன், சசிகலாவின் உறவினர் விவேக் ஜெயராமன் உள்ளிட்டோரிடம் கடந்த வாரம் விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது.
வழக்கில் ஐந்து பேரிடம் ஒரே நேரத்தில் கோவை காவலர் பயிற்சிப் பள்ளியில் நீலகிரி தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி இருக்கிறார்கள். கொடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கில் பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள ஜித்தின் ஜாய், தீபு, சதீசன் , ஜம்சிர் குட்டி அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது கொடநாடு வழக்கில் ஒரு கட்சியினர் பேரம் பேசியதாக தீபு கூறியிருந்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.