அமித்ஷா மகனுக்கு எழுந்து நின்று கைகொடுத்த முதல்வர் ஸ்டாலின்! அரங்கில் பரபரப்பு
அமித்ஷாவுடன் ஸ்டாலின் சந்திப்பு இதுவரைக்கும் நிகழாமல் இருந்தாலும்கூட அமித்ஷா மகனுடன் ஸ்டாலின் சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. அதுவும் எழுந்து நின்று அமித்ஷா மகனுக்கு ஸ்டாலின் கைகொடுத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக டெல்லி சென்றபோது பிரதமர் மோடியை சந்தித்து விட்டு அடுத்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க அனுமதி கேட்டிருந்தார் ஸ்டாலின் என்றும், அந்த சந்திப்பிற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும், இதனால் ஸ்டாலின் ஏமாற்றத்துடன் சென்னை திரும்பியதாகவும் தகவல் வெளியானது.
இதன்பின்னர் திருப்பதியில் நடந்த தென் மண்டல முதல்வர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்பார். அமித்ஷா தலைமையில் நடைபெறுவதால் அந்த கூட்டத்தில் அமித்ஷாவுடன் ஸ்டாலின் சந்திப்பு நிகழும் என்று பேசப்பட்டது. ஆனால் வெள்ள ஆய்வு பணிகளை கவனிப்பதற்காக ஸ்டாலின் அந்த கூட்டத்தை தவிர்த்து அவருக்கு பதிலாக அமைச்சர் பொன்முடியை அனுப்பி வைத்துவிட்டார். இதனால் ஸ்டாலின் -அமித்ஷா சந்திப்பு இரண்டாவது முறையும் நிகழாமல் போனது.
இந்த நிலையில் துபாயில் நடைபெற்ற 14 வது ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. சிஎஸ்கே அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
விழாவில் கலந்து கொண்ட பிசிசிஐ செயலாளரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகனுமான ஜெய்ஷா பேசிவிட்டு இருக்கையில் அமர செல்லும் போது மரியாதை நிமித்தமாக மேடையில் அமர்ந்திருந்த என். சீனிவாசன், முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் இடத்தில் சென்று கைகொடுத்தார். சீனிவாசன் உட்கார்ந்தபடியே ஜெய் ஷாவிடம் கைகொடுத்தார். ஆனால் முதல்வர் ஸ்டாலின் எழுந்து நின்று கை கொடுத்து சில வினாடிகள் அவரிடம் பேசினார்.
அமித்ஷா மகனுக்கு எழுந்து நின்று முதல்வர் ஸ்டாலின் கைகொடுத்து பேசியதால் அரங்கில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.