ஒரு பக்க மீசை எடுத்து, பாதி மொட்டை அடித்துக்கொண்ட வேட்பாளர
நான் கண்டிப்பாக ஜெயிப்பேன் ஒருவேளை நான் தோற்று விட்டால் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன். பாதி மொட்டை அடித்துக் கொள்கிறேன் என்று அரசியலில் பலரும் சவால் விடுவது உண்டு. ஆனால் தோல்வியுற்ற பின்னர் செய்வது கிடையாது.
பொதுவாகவே அரசியலில் வேட்பாளர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை என்பதால் பொது மக்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் ஒரு வேட்பாளர் தான் தோற்று விட்டதால் தான் போட்ட சபதத்தை நிறைவேற்றி இருக்கிறார். ஒரு பக்க மீசையை எடுத்துக்கொண்டிருக்கிறார். பாதி மொட்டை அடித்திருக்கிறார். அடுத்த தேர்தல் வரைக்கும் இப்படித்தான் இருப்பேன் என்றும் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ஆந்திராவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் தான் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
ஆந்திர மாநிலத்தில் நெல்லூர் மாநகராட்சிக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றுள்ளது. 54 வார்டுகளை கொண்ட நெல்லூர் மாநகரில் தெலுங்கு தேசம் கட்சிகும் ஆளும் கட்சிக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவி உள்ளது. இதில் 50 வது வார்டில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் கப்பிரா சீனிவாசன் என்பவர் போட்டியிட்டு இருக்கிறார்.
இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் வெற்றி பெற்றால் ஒரு பக்க மீசையை எடுத்துக்கொள்வேன் பாதி மொட்டை அடித்துக் கொள்வேன் என்று சவால் விடுத்து இருக்கிறார். அவர் நம்பிக்கை பொய்த்துவிட்டது. தேர்தலில் சீனிவாசன் தோல்வி அடைந்து விட்டதால் கொடுத்த வாக்குறுதிப்படி ஒரு பக்க மீசையை எடுத்துக்கொண்டு பாதி மொட்டை அடித்துக்கொண்டிருக்கிறார்.
தற்போது மட்டுமல்ல அடுத்த சட்டமன்ற தேர்தல் வரைக்கும் இப்படியே தொடரப் போகிறேன் என்றும் சொல்லி அவர் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.