திரைமறைவு அரசியல் - அந்த உண்மை சம்பவம்: அமைச்சர் ஸ்மிருதி ராணியின் நாவல்
திரைமறைவு அரசியல், ஊழலில் மூழ்கியிருக்கும் ஒரு அமைப்புக்கு எதிராக விக்ரம் பிரதாப் சிங் என்கிற ஓர் இளம் அதிகாரி எதிர்கொள்ளும் சவால்தான் ‘லால் சலாம்’ நாவல். இந்த நாவலை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி ராணி எழுதி இருக்கிறார். வரும் 29ம் தேதி அன்று வெஸ்ட்லேண்ட் பதிப்பகம் இந்த நாவலை வெளியிடுகிறது.
இந்தியாவின் அதிகம் பேசப்படாத பகுதிதான் இந்த நாவலின் மையம் என்கிறார் ராணி. உண்மை சம்பவம்தான் லால் சலாம் என்று சொல்லும் ராணி, சத்திஸ்கரில் 2010ம் ஆண்டில் நாட்டுக்காக இன்னுயிரை தந்த சிஆர்பிஎப் வீரர்களின் தியாகம்தான் இந்த நாவலின் மையம். சத்தீஸ்கரில் தண்டேவாடா மாவட்டத்தில் சிந்தல்னார் கிராமத்திற்கு அருகில் இந்த உண்மை சம்பவம் நடைபெற்றது. ஏப்ரல் 2010 அன்று வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகளை அழிக்கும் ஆபரேஷன் நடந்தது. இந்த ஆபரேஷனில் 8 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். ஆனால், மாவோயிஸ்டுகளின் மோசமான தாக்குதலில் 76 சிஆர்பிஎப் வீரர்களும் கொல்லப்படனர். இதை மையப்படுத்திதான் லால் சலாம் நாவலை எழுதியிருக்கிறார் ராணி.
அந்த சம்பவம் என் மனதை பாதித்தது. அது என் மனதில் அப்படியே இருந்தது. அதை எழுத்தில் கொண்டு வர விரும்பினேன். தற்போதுதான் அது நடந்திருக்கிறது என்கிறார் ஸ்மிருதி ராணி. சஸ்பென்ஸ், சண்டை என்று ஒரு த்ரில்லர் வகை நாவல் போல இதை எழுதியிருக்கிறார் ராணி.
தொலைக்காட்சி நடிகையாக அறியப்பட்ட ஸ்மிருதி ராணி பாஜகவில் இணைந்து அரசியல்வாதி ஆனார். கடந்த பாஜக ஆட்சியிலும் தற்போதைய பாஜக ஆட்சியிலும் மத்திய அமைச்சராக உள்ளார் ஸ்மிருதி ராணி.