‘சாராயம் கடத்திய வியாபாரி கைது’ ஒரே செல்போன் அழைப்பால் போலீஸ்காரருக்கு இழைக்கப்பட்ட அநீதி!
காரைக்கால் அருகே சாராயம் கடத்திய வியாபாரியை கைது செய்த போலீஸ், பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்காலிலிருந்து கள்ளச்சாராயம் கடத்தப்படுவது மிகவும் இயல்பாகிவிட்டது. அங்கு மட்டுமல்லாது புதுச்சேரியின் பல இடங்களில் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம், தமிழகத்தின் பல இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இது எல்லாருக்கும் தெரிந்த செய்தியே என்றாலும், இதற்கு அதிகாரிகளும் உடந்தையாக இருக்கிறார்கள் என பொதுமக்கள் கூறுகிறார்கள்.
சம்பளத்துக்கு முன் கிம்பளம் டேபிளுக்கு வந்து விடுவதால் காவல்துறை அதிகாரிகள் அதனை கண்டுக் கொள்வதே இல்லை. கள்ளச்சாராயத்தோடு கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களும் அங்கு சர்வ சாதாரணமாகி விட்டது. இந்த நிலையில் புதுச்சேரி நிரவி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ரமேஷ், கள்ளச்சாராய வியாபாரியை மடக்கி பிடித்ததால் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த மாதம் காவலர் ரமேஷ் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, இரு சக்கர வாகனம் ஒன்றில் நிறைய மூட்டைகளுடன் சென்ற நபரை மடக்கி காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் நன்னிலம் பகுதியை சேர்ந்த செல்வராஜ்(61) என தெரிய வந்துள்ளது. வழக்கமாக குற்றவாளியை பிடித்தால் ஒரு போலீஸ்காரருக்கு பாராட்டுக்கள் கிடைப்பது வழக்கம். ஆனால், ரமேஷ் கதையில் அதற்கு மாறாக நடந்துள்ளது. தான் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அதிகாரிகள் அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யாமல், பாதுகாப்புடன் அவரை அனுப்பி வைத்துள்ளனர். நிரவி காவல்நிலையத்துக்கு ஒரு இடத்தில் இருந்து அழைப்பு வந்த உடனே, அந்த நபர் விடுவிக்கப்பட்டதாக தெரிகிறது.
மேலும், எஸ்.பி. உத்தரவின் பேரில் காரைக்கால் நகர காவல் நிலையத்துக்கு ரமேஷ் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ரமேஷுக்கு இழைக்கப்பட்ட அநீதியை அறிந்த சக காவலர்கள், இதனை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக உருவெடுத்து வருகிறது. இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இது குறித்து முதல்வர் நாராயணசாமி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.