தமிழகத்தில் கொரோனாவால் முதல் காவலர் பலி!

 

தமிழகத்தில் கொரோனாவால் முதல் காவலர் பலி!

சென்னை மாம்பலம் காவல் நிலைய காவல் நிலைய சட்டம்- ஒழுங்கு காவல் ஆய்வாளர் பாலமுரளி கொரோன வைரசால் உயிரிழந்தார்.

பாலமுரளிக்கு கடந்த 5-ஆம்தேதி காய்ச்சல் ஏற்பட்டதால் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். அதில் கொரோனா தொற்று உறுதியானதால் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மகாநதி விடுதியில் அனுமதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டார். அங்கு உடல்நிலை மோசமடைந்ததால் 2 நாட்களிலேயே ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். கடந்த 13 ஆம் தேதி தேதி உடல் நிலை மோசமானதை தொடர்ந்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர் தனது சொந்த செலவில் ரூ. 2.25 லட்சத்துக்கு பாலமுரளிக்கு மருந்தை வாங்கிக் கொடுத்தார். உரிய சிகிச்சை கிடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.

அதன் பிறகு பாலமுரளியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவரது உடல் நிலையை தனியாக மருத்துவ குழு ஒன்று கண்காணித்து வந்தது. ஆனால் இன்று அவரது உடல் நிலை மீண்டும் மோசமடைந்தது. தொடர்ந்து மாலை சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்தார்.

தமிழகத்தில் கொரோனாவால் முதல் காவலர் பலி!

வடபழனி காவலர் குடியிருப்பில் வசித்து வந்த அவருக்கு மனைவி, 8-வது படிக்கும் மகள் மற்றும் 4-வது படிக்கும் மகன் உள்ளனர். இவரது சொந்த ஊர் வேலூர். இறந்து போன பாலமுரளியின் தந்தையும் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2000- ஆம் ஆண்டு காவல்துறையில் நேரடி உதவி ஆய்வாளராக பணிக்கு சேர்ந்த பாலமுரளி, சென்னையில் நீலாங்கரை, கேகே நகர், மாம்பலம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளராக பணியாற்றியவர். சென்னையில் காவல்துறையை சேர்ந்த 731 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் 278 பேர் பூரண குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். ஒருவர் மட்டும் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.