போலி கால் சென்டர்கள்… குறிவைக்கப்பட்ட வங்கி கஸ்டமர்கள்… சென்னை போலீஸை அதிர வைத்த மோசடி கும்பல்!
சென்னையில் பல இடங்களில் போலி கால் சென்டர் நடத்தி வங்கி வாடிக்கையாளர்களை ஏமாற்றி மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக போலி கால் சென்டர் மூலம் வங்கி வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்பட்டு வருவதாக சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு நூற்றுக்கணக்கான புகார்கள் குவிந்த வண்ணம் இருக்கும் நிலையில், வங்கி மோசடி தடுப்பு பிரிவு அதிகாரிகள் தனிப்படை அமைத்தனர். இவர்களை பல போலி கால் சென்டர் கும்பலை கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள ராயலா டவர் கட்டடத்தில் பென்ஸ் கிளப்பிற்கு சொந்தமான இடத்தில் போலி கால் சென்டர் நடத்திய பென்ஸ் கிளப் உரிமையாளர் பென்ஸ் சரவணன் மற்றும் விசிக நிர்வாகி செல்வகுமார் உள்ளிட்டோரை மத்திய குற்றப்பிரிவினர் கடந்த மார்ச் மாதம் கைது செய்துள்ளனர். இந்த மோசடியில் செல்வகுமார் மூளையாக செயல்பட்டு பல போலி கால் சென்டர்களை சென்னையில் நடத்தியது விசாரணையில் அம்பலமானது.
இதன் அடிப்படையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பெருங்குடியிலும், திருவான்மியூரில் உள்ள எல்.பி சாலையிலும் போலி கால் சென்டர்களை நடத்திய கோபிநாத், தியாகராஜன், மணி பாலா ஆகியோரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் செல்வகுமாரின் கூட்டாளிகள் ஆவர். இந்த கும்பல், பல பெண்களை வைத்து தனியார் இன்சூரன்ஸ் நிறுவன பெயரை பயன்படுத்தி பலரையும் ஏமாற்றியது தெரியவந்தது. இந்த ஊரடங்கு காலத்தில் பணத்துக்காக கஷ்டப்படும் நபர்களிடம் தனிநபர் கடன் பெற்றுத் தருவதாக கூறி அவர்களது ஆவணங்களை பெற்று, கையில் வைத்திருக்கும் சிறுசேமிப்பு பணத்தையும் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் தியாகராஜன் ஏற்கெனவே சென்னை அண்ணாசாலையில் மிகப்பெரிய அளவில் போலி கால் சென்டர் நடத்திய கும்பலோடு தொடர்புடையவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
செல்வகுமாருக்கு மூளையாக செயல்பட்டமேலும் 4 பேரை காவல்துறையினர் கடந்த 11ம் தேதி கைது செய்தனர். இவர்களோடு, சென்னையைச் சேர்ந்த கோகுலகிருஷ்ணன், ராஜ்குமார், ஜாவித், முகமது ஜாகீர்கான் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, கடன் வாங்கித் தருவதாக பேசும் நபர்களை நம்பி அசல் ஆவணங்களை தர வேண்டாம் என மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்துள்ளனர்.