“புற்றுநோய் மீட்புக்காகப் பற்றுநோய் துறந்த தவசீலி” – கவிஞர் வைரமுத்து இரங்கல்
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா (93) இன்று உடல்நல குறைவால் காலமானார். இதய நோய் பிரச்னை காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். தற்போது மருத்துவர் சாந்தாவின் உடல் பொது மக்களின் அஞ்சலிக்காக சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
மருத்துவர் சாந்தாவின் சேவையை கௌரவிக்கும் வகையில், அவரது உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. அவரது உடலுக்கு பொதுமக்கள் பலரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மருத்துவர் சாந்தாவின் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், வைகோ, டிடிவி தினகரன், திருமாவளவன் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
டாக்டர் சாந்தா
புற்றுநோய் மீட்புக்காகப்
பற்றுநோய் துறந்த தவசீலி.
உடல் – பொருள் – ஆவியைப்
பொதுப்பணிக்கு அர்ப்பணித்த போராளி.
இருக்கும்வரை
உடலால் நினைக்கப்படும் மனிதர்கள்
இறந்தபிறகு
செயலால் நினைக்கப்படுகிறார்கள்.
டாக்டர் சாந்தா
நீண்ட காலம் நினைக்கப்படுவார்.
அன்னைக்கு அஞ்சலி” என்று பதிவிட்டுள்ளார்.