2 நாள் வங்கதேச பயணம் நிறைவு.. டெல்லி திரும்பினார் பிரதமர்.. வங்கதேச மக்களுக்கு நன்றி தெரிவித்த மோடி
பிரதமர் நரேந்திர மோடி தனது 2 நாள் வங்கதேச பயணத்தை முடித்து கொண்டு நேற்றிரவு டெல்லி வந்தடைந்தார். பாசம் மற்றும் அன்பான விருந்தோம்பல் அளித்தற்காக வங்கதேச மக்களுக்கும், அந்நாட்டு அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 15 மாதங்களாக பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில் வங்க தேசத்தின் சுதந்திர தினவிழாவில் கலந்து கொள்ள வருமாறு அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதனையடுத்து 15 மாதங்களுக்கு பிறகு கடந்த வெள்ளக்கிழமையன்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக வங்கதேசம் சென்றார். 15 மாதங்களுக்கு பிறகு பிரதமர் மோடி மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.
வங்கதேச சுற்றுப்பயணத்தின் 2வது நாளான நேற்று பிரதமர் மோடி ஒராகண்டியில் மாதுவா சமூக உறுப்பினர்களை சந்தித்து பேசினார். அப்போது பிரதமர் மோ பேசுகையில், இந்தியா மற்றும் வங்கதேசம் ஆகிய இருநாடுகளும் உலகம் முழுவதும் நிலையற்றதன்மை, தீவிரவாதம் மற்றும் அமைதியின்மைக்கு பதிலாக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் அன்பை விரும்புகின்றன என தெரிவித்தார். பிரதமர் மோடியின் வங்க தேச பயணத்தின்போது, இருநாடுகளுக்கு இடையே பேரழிவு மேலாண்மை, விளையாட்டு மற்றும் இளைஞர்கள் விவகாரம், வர்த்தகம், தொழில்நுட்பம் மற்றும் பல முக்கிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.
பிரதமர் மோடியும், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவும் டாக்காவிற்கும், புதிய ஜல்பைகுரிக்கும் இடையில் இயக்கப்படும் மிட்டாலி எக்ஸ்பிரஸை தொடங்கி வைத்தனர். 12 லட்சம் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இந்தியாவின் பரிசாக பிரதமர் மோடி வங்கதேசத்துக்கு வழங்கினார். பிரதமர் மோடி தனது 2 நாள் வங்கதேச சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நேற்றிரவு டாக்காவிலிருந்து கிளம்பி டெல்லி வந்தடைந்தார். எனது வருகையின் போது வங்கதேச மக்கள் பாசம் தெரிவித்ததற்கும், ஷேக் ஹசீனா மற்றும் வங்கதேச அரசாங்கத்தின் அன்பான விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.